இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

புதன், 20 ஏப்ரல், 2011

கிறிஸ்துவை பற்றீய முழு விளக்கம் - பகுதி - 2



66. புதிய ஏற்பாட்டில் எத்தனை நூல்கள் உள்ளன?
புதிய ஏற்பாட்டில் மொத்தம் இருபத்தேழு நூல்கள் உள்ளன.

67.
நற்செய்தி நூல்கள் யாவை?
நற்செய்தி நூல்கள் நான்கு.
1. மத்தேயு எழுதிய நற்செய்தி
2. மாற்கு எழுதிய நற்செய்தி
3. லூக்கா எழுதிய நற்செய்தி
4. யோவான் எழுதிய நற்செய்தி

68.
புதிய ஏற்பாடு நமக்குக் கூறும் செய்தி என்ன?
கிறிஸ்துவின் வாழ்வு, மீட்புப் பணி, தொடக்கத் திருச்சபையின் வரலாறு, கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் புதிய ஏற்பாடு நமக்குக் கூறுகிறது.

[தொகு] VII. திருவருள்சாதனங்கள்
மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கிறிஸ்து நம்மோடு உறவு கொண்டு, நம்மை அருள் வாழ்வில் வளரச் செய்கிறார்; தம் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறைநிகழ்ச்சியில் நாம் பங்கேற்கச் செய்கிறார். இவ்வாறு மனித வாழ்வின் முக்கிய கட்டங்களில் கிறிஸ்து ஆற்றும் செயல்களே திருவருள்சாதனங்கள் ஆகும்.

69.
திருவருள்சாதனம் என்றால் என்ன?
அருள் வாழ்வைக் குறித்துக் காட்டவும், அதனை வழங்கவும், கிறிஸ்து ஏற்படுத்திய நிலையான அடையாளமே திருவருள்சாதனம் ஆகும்.

70.
திருவருள்சாதனங்கள் எத்தனை?
ஏழு.

71.
அவை யாவை?
1. திருமுழுக்கு
2. உறுதிப் பூசுதல்
3. நற்கருணை
4. ஒப்புரவு
5. நோயில் பூசுதல்
6. குருத்துவம்
7. திருமணம்

72.
திருவருள்சாதனங்கள் வழியாக நாம் என்ன பெறுகிறோம்?
திருவருள்சாதனங்கள் வழியாக நாம் அருள்வாழ்வைப் பெறுகிறோம்.

73.
திருமுழுக்கு என்றால் என்ன?
பிறப்புநிலைப் பாவத்தையும் செயல்வழிப் பாவத்தையும் போக்கி, கிறிஸ்துவோடு நம்மை இணைத்து, கடவுளின் பிள்ளைகளாகவும் திருச்சபையின் உறுப்பினர்களாகவும் ஆக்குகின்ற அருள்சாதனமே திருமுழுக்கு ஆகும்.

74. உறுதிப் பூசுதல் என்றால் என்ன?
தூய ஆவியாராலும் அவருடைய கொடைகளாலும் நம்மை நிரப்பி, திருச்சபையின் பணிகளில் கடமை உணர்வோடு ஈடுபட நமக்கு ஆற்றலைத் தருகிற அருள்சாதனமே உறுதிப்பூசுதல் ஆகும்.

75.
தூய ஆவியார் நமக்கு எவ்வாறு உதவுகிறார்?
நம்பிக்கையில் நாம் உறுதியாய் நிலைத்திருக்கவும், கடவுள்மேல் நிறைவான அன்பு கொண்டு வாழவும், கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக விளங்கவும், தம் கொடைகளை வழங்கி நமக்கு உதவுகிறார்.

76.
தூய ஆவியாரின் கொடைகள் யாவை?
1. ஞானம்
2. மெய்யுணர்வு
3. அறிவுரைத் திறன்
4. நுண்மதி
5. ஆற்றல்
6. இறைப்பற்று
7. இறையச்சம்

77.
தூய ஆவியார் விளைவிக்கும் கனிகள் யாவை?
1. அன்பு
2. மகிழ்ச்சி
3. அமைதி
4. பொறுமை
5. பரிவு
6. நன்னயம்
7. நம்பிக்கை
8. கனிவு
9. தன்னடக்கம்
10. பணிவு நயம்
11. தாராள குணம்
12. நிறை கற்பு

78.
நற்கருணை என்றால் என்ன?
அப்ப இரச குணங்களுக்குள், இயேசு கிறிஸ்துவின் திருஉடலும் திருஇரத்தமும் அவருடைய இறை இயல்பும் மனித இயல்பும் அடங்கி இருக்கிற அருள்சாதனமே நற்கருணை ஆகும்.

79.
இயேசு எப்பொழுது நற்கருணையை ஏற்படுத்தினார்?
இயேசு தமது இறுதி இரவு உணவின்போது நற்கருணையை ஏற்படுத்தினார்.

80.
இயேசு எவ்வாறு நற்கருணையை ஏற்படுத்தினார்?
தாம் கையளிக்கப்பட்ட இரவில், இயேசு அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அதைப் பிட்டு, தம் சீடருக்கு அளித்துக் கூறியதாவது: அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்; ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, உணவு அருந்தியபின், கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடருக்கு அளித்து அவர் கூறியதாவது: அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்; ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம். இது பாவ மன்னிப்புக்கு என்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
இவ்வாறு இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார்.

81.
திருப்பலியில் இது எவ்வாறு நிறைவேறுகிறது?
திருப்பலியில் அப்பம் கிறிஸ்துவின் திருஉடலாகவும், திராட்சை இரசம் அவருடைய திருஇரத்தமாகவும் மாறுகின்றன.

82.
இயேசு நற்கருணையை ஏன் ஏற்படுத்தினார்?
இறைமக்களின் ஆன்ம உணவாகவும், தம்முடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்பு இவற்றின் நினைவாகவும், தாம் நம்முடன் இருப்பதை உணர்த்தும் அருள்சாதனமாகவும் இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார்.

83.
நற்கருணை வாங்குவோர் எந்த நிலையில் இருக்க வேண்டும்?
பாவ நிலையில் இல்லாமல், கடவுளோடும் தம் சகோதரர் சகோதரிகளோடும் நல்லுறவில் நிலைத்திருக்க வேண்டும்.

84.
திருப்பலியின் இரு பெரும் பகுதிகள் யாவை?
1. இறைவாக்கு வழிபாடு
2. நற்கருணை வழிபாடு

85.
திருப்பலியில் பங்கேற்பது எவ்வாறு?
வெறும் பார்வையாளர்கள் போல் இராமல், திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். இறைவார்த்தையைக் கவனமுடன் கேட்டு, திருச்சடங்குகளில் ஒன்றித்து, இறை வேண்டல்களிலும் பாடல்களிலும் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும்.

86.
ஒப்புரவு அருள்சாதனம் என்றால் என்ன?
திருமுழுக்குப் பெற்ற பின் நாம் செய்யும் பாவங்களை எல்லாம் போக்கி, நம்மைக் கடவுளோடும் பிறரோடும் மீண்டும் இணைக்கிற அருள்சாதனமே ஒப்புரவு ஆகும்.

87.
ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்குபெறும் முறை யாது?
1. செய்த பாவங்களை நினைவுக்குக் கொண்டுவருதல்.
2. அவற்றிற்காக மனம் வருந்துதல்.
3. இனிமேல் பாவம் செய்வதில்லை எனத் தீர்மானித்தல்.
4. குருவிடம் பாவங்களை மறைக்காமல் அறிக்கையிடுதல்.
5. பாவப் பரிகாரமாகவும், பாவ மன்னிப்பிற்கு நன்றியாகவும் குரு கொடுத்த கட்டளையை நிறைவேற்றுதல்.

88.
நோயில்பூசுதல் என்றால் என்ன?
நலம் தரும் மருத்துவராகிய கிறிஸ்துவைச் சந்திக்க வைத்து, நம் பாவங்களையும் அவற்றிற்கு உரிய தண்டனைகளையும் போக்கி, நம்மை விண்ணக வாழ்விற்குத் தயாரிக்கிற அருள்சாதனமே நோயில்பூசுதல் ஆகும்.

89.
குருத்துவம் என்றால் என்ன?
திருப்பலி மற்றும் திருவருள்சாதனங்களை நிறைவேற்றவும், நற்செய்தி அறிவிக்கவும், இறைமக்களை வழிநடத்தி உருவாக்கவும் உரிமை அளிக்கிற அருள்சாதனமே குருத்துவம் ஆகும்.

90.
திருமணம் என்றால் என்ன?
ஆணையும் பெண்ணையும் கணவன் மனைவியாக இணத்து, அவர்கள் ஒருவர் ஒருவரை இறுதிவரை அன்பு செய்யவும்,தம் பிள்ளைகளைக் கிறிஸ்தவ நெறியில் வளர்க்கவும், இல்லத் திருச்சபையை உருவாக்கவும் இறையருளை அளிக்கிற அருள்சாதனமே திருமணம் ஆகும்.

[தொகு] VIII. கிறிஸ்தவரின் அன்றாட வாழ்க்கை
மனித வாழ்வு சிறப்பாக அமையக் கடவுளே சில சட்ட திட்டங்களை நமக்கு வகுத்துத் தந்துள்ளார்; நம் இதயத்தில் பதித்து வைத்துள்ளார். இவற்றைப் பத்துக் கட்டளைகள் என அழைக்கிறோம். இந்தக் கட்டளைகளை இயேசுவே கடைப்பிடித்து நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார். மேலும், கிறிஸ்துவின் போதனைகளைச் செம்மையாகக் கடைப்பிடிப்பதற்குத் திருச்சபையும் சில வழி முறைகளைக் கொடுத்துள்ளது. இவற்றைத் திருச்சபையின் ஒழுங்கு முறைகள் என்கிறோம். தூய ஆவியாரின் துணை கொண்டு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுவதே அன்றாடக் கிறிஸ்தவ வாழ்க்கை ஆகும்.

91.
உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை நடத்துவது எவ்வாறு?
நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய கிறிஸ்தவ நற்பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்வதன் வழியாக, நாம் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை நடத்துகிறோம்.

92.
நம்பிக்கை என்றால் என்ன?
தம்மை நமக்கு வெளிப்படுத்தும் கடவுளின் திட்டத்தை ஏற்று, நம்மை அவரிடம் ஒப்படைப்பதே நம்பிக்கை ஆகும்.

93.
எதிர்நோக்கு என்றால் என்ன?
கடவுளுக்கு நாம் கீழ்ப்படிந்து வாழ்ந்தால், அவர் நம்மைக் கைவிடாமல் பாதுகாத்து, வழிநடத்தி, நிலைவாழ்வில் சேர்ப்பார் என்னும் மனவுறுதியே எதிர்நோக்கு ஆகும்.

94.
அன்பு என்றால் என்ன?
அனைத்திற்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்யவும், தம்மைப் போல் மற்றவர்களை அன்பு செய்யவும் கடவுள் நமக்கு அளிக்கும் அருளாற்றலே அன்பு ஆகும்.

95.
கடவுளுக்கு உகந்த வாழ்க்கை நடத்த அவர் நமக்குத் தந்துள்ள கட்டளைகள் யாவை?
பத்துக் கட்டளைகள்.
1. நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.
2. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே.
3. ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு.
4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
5. கொலை செய்யாதே.
6. விபசாரம் செய்யாதே.
7. களவு செய்யாதே.
8. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே.
9. பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே.
10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே.
இந்தப் பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்:
முதலாவது, எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்வது.
இரண்டாவது, தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வது.

96.
திருச்சபையின் ஒழுங்குமுறைகள் யாவை?
திருச்சபையின் ஒழுங்குமுறைகள்:
1. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் திருப்பலியில் முழுமையாய்ப் பங்கேற்க வேண்டும்; இந்நாள்களின் புனிதத்தைப் பாதிக்கக் கூடிய செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.
2. ஆண்டிற்கு ஒரு முறையாவது தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்க வேண்டும்.
3. பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்று, நற்கருணை உட்கொள்ள வேண்டும்.
4. திருச்சபை குறிப்பிட்டுள்ள நாள்களில் இறைச்சி உண்ணாதிருக்க வேண்டும்; நோன்பு நாள்களில் ஒரு வேளை மட்டும் முழு உணவு உண்ணலாம்.
5. குறைந்த வயதிலும், திருமணத் தடை உள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும்.
6. திருச்சபையின் தேவைகளை நிறைவேற்ற நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும்.

97.
கடவுளுடைய கட்டளைகளையும் திருச்சபையின் ஒழுங்குமுறைகளையும் நாம் மீறினால் என்ன நேரும்?
கடவுளோடும் திருச்சபையோடும் சமுதாயத்தோடும் நாம் கொண்டுள்ள நல்லுறவு பாதிக்கப்படும். இதையே பாவம் என்கிறோம்.

98.
எத்தனை வகைப் பாவங்கள் உள்ளன?
பிறப்புநிலைப் பாவம், செயல்வழிப் பாவம் என இரண்டு வகைப் பாவங்கள் உள்ளன.

99.
பிறப்புநிலைப் பாவம் என்றால் என்ன?
முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமையால் உண்டாகி, நம்மோடு பிறக்கிற பாவம்.

100.
செயல்வழிப் பாவம் என்றால் என்ன?
நன்மை தீமை அறிந்த நிலையில், ஒருவர் முழு மனத்துடன் செய்யும் பாவம்.

101.
செயல்வழிப் பாவம் எத்தனை வகைப்படும்?
சாவான பாவம், அற்ப பாவம், என இரண்டு வகைப்படும்.

102.
சாவான பாவம் என்றால் என்ன?
கடவுளுடைய கட்டளையை முழு அறிவுடனும், முழு விருப்பத்துடனும் மீறி, பெரியதொரு தீங்கினைச் செய்து, அவரது அன்பை முறித்துக் கொள்வது சாவான பாவம்.

103.
அற்ப பாவம் என்றால் என்ன?
முழுமையான அறிவோ விருப்பமோ இன்றி, கடவுளுடைய அன்புக்கு எதிராகச் செயல்படுவது அற்ப பாவம். இப்பாவத்தைத் தொடர்ந்து செய்யும்போது அது சாவான பாவத்திற்கு வழி வகுக்கிறது.
104. தலையான பாவங்கள் எத்தனை?
ஏழு.

105.
அவை யாவை?
1. தற்பெருமை
2. சீற்றம்
3. காம வெறி
4. பேராசை
5. பெருந்தீனி விருப்பம்
6. பொறாமை
7. சோம்பல்

106.
தலையான பாவங்களுக்கு எதிரான நற்பண்புகள் யாவை?
1. தாழ்ச்சி
2. பொறுமை
3. கற்பு
4. தாராள குணம்
5. அளவோடு உண்ணல்
6. பிறரன்பு
7. சுறுசுறுப்பு

107.
அருள் வாழ்வு சார்ந்த மூன்று நற்பண்புகள் யாவை?
1. நம்பிக்கை
2. எதிர்நோக்கு
3. அன்பு

108.
புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையா?
முறையே. ஏனெனில் புனிதர்கள் கடவுளோடு நெருங்கிய உறவு கொண்டுள்ளார்கள்; நமக்காகக் கடவுளிடம் பரிந்துரைக்கிறார்கள்.

109.
புனிதர் வணக்கம் சிலை வழிபாடு ஆகுமா?
ஆகாது. கடவுளுக்கு மட்டுமே நாம் வழிபாடு செய்கிறோம். புனிதர்களுக்கு நாம் செலுத்துவது வணக்கம் மட்டுமே.

110.
நாம் கடவுளோடு கொண்டுள்ள நட்புறவை வளர்க்கத் துணைபுரிபவை யாவை?
1. இறைவேண்டல்
2. இறைவார்த்தை
3. திருவருள்சாதனங்கள்

111.
இறைவேண்டல் என்றால் என்ன?
கடவுளோடு அன்புடன் உரையாடுவதே இறைவேண்டல். அதாவது, பிள்ளைகள் தங்கள் தந்தையிடம் நம்பிக்கையுடன் பேசுவது போல் கடவுளுடன் நாம் பேசுவது இறைவேண்டல் ஆகும்.

112.
இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல் என்ன?
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

113.
நாம் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்வது எப்படி?
கிறிஸ்துவை நம் முன்மாதிரியாகக் கொண்டு, அவரிடம் விளங்கிய அன்பு, உண்மை, நீதி முதலிய பண்புகளைக் கடைப்பிடித்து, அவருடைய பணிகளை ஆற்றுவதன் வழியாக நாம் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ முடியும்.

114.
கிறிஸ்தவப் பெற்றோரின் கடமை என்ன?
1. கணவனும் மனைவியும் ஒருவர் ஒருவரிடம் தன்னலம் அற்ற அன்பும், நேர்மையான பற்றும் கொண்டிருக்க வேண்டும்.
2. தங்கள் பிள்ளைகளுக்குக் கிறிஸ்தவ வாழ்வில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.
3. தங்கள் பிள்ளைகளை நன்னடத்தையிலும் கிறிஸ்தவ நம்பிக்கையிலும் வளர்க்க வேண்டும்.

115.
பிள்ளைகளின் கடமை என்ன?
பிள்ளைகள் இயேசுவைப் பின்பற்றி, தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, அன்பில் வளர வேண்டும்.

116.
கிறிஸ்தவக் குடும்பங்களின் சாட்சிய வாழ்வு எப்படி இருக்க வேண்டும்?
1. பெற்றோரும் பிள்ளைகளும் இறைவார்த்தை வழியில் வாழ வேண்டும்.
2. அருள்சாதன வாழ்வில் அக்கறையும் நம்பிக்கையும் கொண்டு வாழ வேண்டும்.
3. திருச்சபையின் வளர்ச்சிக்காகவும் சமூக நலனுக்காகவும் தன்னலம் இன்றி உழைக்க வேண்டும்.

117.
கிறிஸ்தவ வாழ்வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவோர் யாவர்?
கடவுளின் தாயும் என்றும் கன்னியுமான தூய மரியாவும் மற்றப் புனிதர்களும் ஆவர்.

[தொகு] IX. மனிதரின் நிறைவு நிலை
இறப்புடன் மனித வாழ்வு முடிவு அடைவதில்லை; வாழ்வு மாறுபடுகிறதே அன்றி அழிக்கப்படுவதில்லை என்பதே நமது நம்பிக்கை. அதைப் பற்றிக் கிறிஸ்தவப் போதனையின் அடிப்படையில் திருச்சபை சில உண்மைகளைத் தெளிவுபடுத்தியுள்ளது.

118.
கிறிஸ்தவர் இறப்பை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?
இறப்பு விண்ணக வாழ்வின் பிறப்பு. ஆகவே இறப்பின்மீது வெற்றி கொண்ட நம் மீட்பராகிய கிறிஸ்துவை, முழுமையாகச் சந்திக்கும் வேளை என்னும் மனநிலையோடு, கிறிஸ்தவர் இறப்பை எதிர்கொள்ள வேண்டும்.

119.
இறப்புக்குப் பின் என்ன நடக்கும்?
தனித் தீர்ப்பு நடக்கும்.

120.
தனித் தீர்ப்பு என்றால் என்ன?
ஒவ்வொருவரும் அவரவர் செய்த நன்மை, தீமைக்கு ஏற்பத் தீர்ப்பிடப்படுவதையே தனித் தீர்ப்பு என்கிறோம்.

121.
தனித் தீர்ப்புக்குப் பின் என்ன நடக்கும்?
1. எவ்விதப் பாவமும் இல்லாதவர்கள் விண்ணகம் செல்வார்கள்.
2. சாவான பாவம் உள்ளவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள்.
3. அற்ப பாவம் உள்ளவர்கள் தூய்மை பெறும் நிலைக்குச் செல்வார்கள்.

122.
நல்லவர்கள் விண்ணகத்தில் அடையும் பேறு என்ன?
கடவுளை நேருக்கு நேராகக் கண்டு, முடிவில்லாப் பெருமகிழ்வில் திளைத்து, அவரோடு என்றென்றும் வாழ்வார்கள்.

123.
பாவிகள் நரகத்தில் படுகிற வேதனை என்ன?
கடவுளை ஒருபொழுதும் காணாமல், அவரைப் பிரிந்து, அலகையோடு முடிவில்லாத் துன்பத்திற்கு உள்ளாவர்.

124.
தூய்மை பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கும்?
அவர்கள் தங்கள் பாவங்களுக்கு உரிய வேதனைப்பட்டு, தூய்மை அடைவார்கள். முற்றிலும் தூய்மை அடைந்த பிறகு, விண்ணகம் செல்வார்கள்.

125.
உலக முடிவில் என்ன நடக்கும்?
பொதுத் தீர்ப்பு நடக்கும்.

126.
பொதுத் தீர்ப்பு என்றால் என்ன?
1. உலக முடிவில் இயேசு கிறிஸ்து மாட்சியோடு மீண்டும் வருவார்.
2. இறந்த எல்லாரும் உடலோடும் ஆன்மாவோடும் உயிர்ப்பிக்கப் பெறுவர்.
3. இவர்கள் உயிருடன் உள்ளவர்களோடு தீர்ப்புக்கு வருவர்.

127.
பொதுத் தீர்ப்புக்குப் பின் நடப்பது என்ன?
நல்லவர்கள் நிலை வாழ்வையும் பாவிகள் நிலையான தண்டனையும் பெறுவார்கள்.

[தொகு] X. அன்னை மரியா
அளவில்லாக் கருணையும் ஞானமும் உள்ள கடவுள் உலகை மீட்க ஆவல் கொண்டு, தம் மகனை உலகிற்கு அனுப்பினார். இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார். தூய ஆவியாரால் கன்னி மரியாவிடம் மனிதரானார். நம்பிக்கைக் கொண்டோர் நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும் எப்பொழுதும் கன்னியுமான மாட்சி மிக்க மரியாவுக்கு சிறப்பான வணக்கம் செலுத்துகின்றனர்.

128.
அன்னை மரியாவைப் பற்றிய மறை உண்மைகள் யாவை?
1. தூய மரியா கடவுளின் தாய்.
2. அவர் எப்பொழுதும் கன்னி.
3. அவர் அமல உற்பவி.
4. அவர் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்பு அடைந்தவர்.

129.
செபமாலையின் மறை உண்மைகள் யாவை?
1. மகிழ்வின் மறை உண்மைகள்.
2. ஒளியின் மறை உண்மைகள்.
3. துயரின் மறை உண்மைகள்.
4. மாட்சியின் மறை உண்மைகள்.

130.
மகிழ்வின் மறை உண்மைகள் யாவை?
1. கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூது உரைத்தது.
2. இறை அன்னை எலிசபெத்தைச் சந்தித்தது.
3. இயேசு பெத்லகேமில் பிறந்தது.
4. இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
5. காணாமல்போன இயேசுவைக் கோவிலில் கண்டடைந்தது.

131.
ஒளியின் மறை உண்மைகள் யாவை?
1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றது.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியது.
3. இயேசு இறையரசைப் போதித்தது.
4. இயேசு தாபோர் மலையில் தோற்றம் மாறியது.
5. இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது.

132.
துயரின் மறை உண்மைகள் யாவை?
1. இயேசு இரத்த வியர்வை சிந்தியது.
2. இயேசு கல்தூணில் கட்டுண்டு அடிபட்டது.
3. இயேசு முள்முடி சூட்டப்பட்டது.
4. இயேசு கல்வாரி மலைக்குச் சிலுவை சுமந்து சென்றது.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டுத் தம் ஆவியைத் துறந்தது.

133.
மாட்சியின் மறை உண்மைகள் யாவை?
1. இயேசு இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது.
2. இயேசு விண்ணகம் சென்றது.
3. அன்னை மரியா மீதும் திருத்தூதர்கள் மீதும் தூய ஆவியார் எழுந்தருளி வந்தது.
4. இறை அன்னை விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
5. இறை அன்னை விண்ணக, மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை: