இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

புதன், 20 ஏப்ரல், 2011

கிறிஸ்துவத்தி பற்றீய முழு விளக்கம் - பகுதி 1


1. கடவுளை நாம் எவ்வாறு அடையலாம்?
கடவுளை அறிந்து, அவரை அன்பு செய்து, அவருடைய பிள்ளைகளாகிய எல்லா மனிதரையும் அன்பு செய்து வாழ்ந்தால் நாம் கடவுளை அடையலாம்.



2. கடவுளை நாம் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?
கடவுள் தாம் படைத்த பொருள்கள் வழியாகத் தம்மை வெளிப்படுத்துகிறார். அவற்றைப் பார்த்து, படைத்தவரை நாம் அறிந்துகொள்ள முடியும். சிறப்பாக, இறைவெளிப்பாடு வழியாகவும் அவரை அறிந்துகொள்ளலாம்.



3. கடவுளை நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
கடவுள் நம்மைப் படைத்துக் காத்துவரும் தந்தை; நாம் அவருடைய பிள்ளைகள். ஆகவே நாம் அவரை அன்பு செய்ய வேண்டும்.



4. கடவுளை நாம் எவ்வாறு அன்பு செய்ய முடியும்?
கடவுளின் விருப்பப்படி வாழ்வதன் வழியாக நாம் அவரை அன்பு செய்ய முடியும்.



5. கடவுள் நம்மிடம் விரும்புவது என்ன?
தாம் அளித்த கட்டளைகளுக்கும் நம் மனச்சான்றுக்கும் ஏற்ப நாம் வாழ வேண்டும் எனக் கடவுள் விரும்புகிறார்.



6. எல்லா மனிதரையும் நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்; இதனால் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள். ஆதலால் நாம் எல்லா மனிதரையும் அன்பு செய்ய வேண்டும்.



7. நாம் மற்றவர்களை எவ்வாறு அன்பு செய்ய வேண்டும்?
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அன்பு செய்தது போல நாமும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்.

[தொகு] II. மீட்புக்குத் தயாரிப்பு
நாம் இவ்வுலகப் படைப்பிலே அழகையும் ஒழுங்கையும் காண்கிறோம். அவற்றைக் கண்டு பெரிதும் வியப்பு அடைகிறோம். ஆனால் இந்த அழகான உலகில் பாவமும் தீமையும் துன்பமும் இருப்பதைக் காண்கிறோம். இவற்றின் காரணத்தை அறிய ஆவல் கொள்கிறோம்.



8. அனைத்தையும் படைத்தவர் யார்?
கடவுள்.



9. கடவுளின் மிகச் சிறந்த படைப்புகள் எவை?
உடல் இல்லாத வானதூதரும், உடலும் ஆன்மாவும் கொண்ட மனிதரும் ஆவர்.



10. வானதூதர் என்பவர் யார்?
கடவுளை ஏற்று, அவருக்குப் பணி செய்து, அவரது பெரு மகிழ்வில் பங்குபெறுபவர்களே வானதூதர் ஆவர்.



11. அலகையைப் பற்றி நாம் அறிவது என்ன?
கடவுளை ஏற்க மறுத்து நரகத்திற்குச் சென்றவர்களே அலகை ஆவர்.



12. கடவுள் உலகை எதற்காகப் படைத்தார்?
கடவுள் தம்முடைய அன்பையும் ஞானத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்த உலகைப் படைத்தார். மனிதருக்குப் பயன்படும் வகையில் அதனை அமைத்தார்.



13. கடவுள் மனிதரை எவ்வாறு படைத்தார்?
கடவுள் மனிதரைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்தார்.



14. கடவுள் மனிதரை எதற்காகப் படைத்தார்?
தம்மை அறிந்து, அன்புசெய்து, தமக்குப் பணிபுரிந்து, தம்முடைய பெரு மகிழ்வில் பங்குகொள்ளக் கடவுள் மனிதரைப் படைத்தார்.



15. பெரு மகிழ்வில் பங்குகொள்ளக் கடவுள் மனிதருக்கு அளித்த கொடை என்ன?
மனிதரைத் தம்முடைய பிள்ளைகள் என்னும் நிலைக்கு உயர்த்தி, தம்மை அப்பா என அழைக்கும் உரிமையை அளித்தார். இதுவே கடவுள் மனிதருக்கு அளித்த கொடையாகும். இதை அருள்நிலை என்றும் அழைக்கிறோம்.



16. மனிதர் இந்நிலையை எவ்வாறு இழந்தனர்?
அலகையை நம்பி, கடவுளின் கட்டளையை மீறி, பாவம் செய்ததால் மனிதர் அருள்நிலையை இழந்தனர்.



17. முதல் பெற்றோரின் பாவத்தினால் மனிதர் பெற்ற தண்டனை யாது?
1. கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையை இழந்தனர்.
2. கடவுள் கொடுத்த அருள்நிலையை இழந்தனர்.
3. பாவ நாட்டம், துன்பம், சாவு முதலிய இன்னல்களுக்கும் நரகத் தண்டனைக்கும் உள்ளாயினர்.



18. பாவ நிலையிலேயே கடவுள் மனிதரை விட்டுவிட்டாரா?
இல்லை. மனிதரைப் பாவ நிலையிலிருந்து விடுவிக்க ஒரு மீட்பரை அனுப்புவதாகக் கடவுள் வாக்களித்தார்.

[தொகு] III. இயேசு கிறிஸ்து உலக மீட்பர்
கடவுளுக்குக் கீழ்ப்படியாத முதல் பெற்றோரின் குற்றத்தைத் தொடர்ந்து, மனிதர் மேன்மேலும் பாவத்தில் மூழ்கினர். இருப்பினும் கடவுள் உலகின் மீது இரக்கம் கொண்டார். தமக்கும் மனிதருக்கும் இடையே நட்பையும் உறவையும் ஏற்படுத்த இஸ்ரயேல் மக்களின் தந்தையான ஆபிரகாம் வழியாக உடன்படிக்கை செய்துகொண்டார். எகிப்து நாட்டில் அடிமைகளாய் இருந்த இஸ்ரயேல் மக்களை, மோசே தலைமையில் மீட்டு, சீனாய் மலையில் அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். வாக்களிக்கப்பெற்ற கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுத்தார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பெற்ற இஸ்ரயேல் மக்களோ இந்த உடன்படிக்கையைப் பல முறை மீறினார்கள்; கடவுளைப் புறக்கணித்தார்கள். எனினும் கடவுள் அவர்களைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, இறைவாக்கினர்களை அனுப்பி, மீட்பரின் வருகையை அவர்களுக்கு எடுத்துரைத்தார். எனவே இஸ்ரயேல் மக்கள் மற்றும் உலக மக்கள் அனைவருமே மீட்பராகிய இயேசுவின் வருகையை எதிர்நோக்கி இருந்தார்கள்.



19. கடவுள் வாக்களித்த மீட்பர் யார்?
இயேசு கிறிஸ்து.



20. இயேசு கிறிஸ்து என்னும் பெயருக்குப் பொருள் என்ன?
இயேசு என்பதற்கு மீட்பர் என்றும், கிறிஸ்து என்பதற்கு அருள்பொழிவு பெற்றவர் என்றும் பொருள் ஆகும்.



21. இயேசு எந்த நாட்டில் பிறந்தார்?
பாலஸ்தீன் என்னும் இஸ்ரயேல் நாட்டில் பிறந்தார்.



22. இயேசு எந்த ஊரில் பிறந்தார்?
பெத்லகேம் என்னும் ஊரில் பிறந்தார்.



23. இயேசுவின் தாய் யார்?
எப்பொழுதும் கன்னியான தூய மரியா.



24. இயேசு கன்னி மரியாவிடம் எப்படிப் பிறந்தார்?
தூய ஆவியாரின் வல்லமையால் வியத்தகு முறையில் கருவாகி, இயேசு மனிதராகப் பிறந்தார்.



25. இயேசுவின் தந்தை யார்?
கடவுளே இயேசுவின் தந்தை. புனித யோசேப்பு அவருடைய வளர்ப்புத் தந்தை மட்டுமே.



26. இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி நாம் அறிவது என்ன?
1. இயேசு பிறந்த நாற்பதாம் நாள் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்டார்.
2. நாசரேத்து ஊரில் வளர்ந்து வந்தார்.
3. தம் தாய் தந்தையருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.
4. தம் பன்னிரண்டாம் வயதில் போதகர் நடுவில் கற்பித்தார்.
5. ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.



27. இயேசு திருமுழுக்குப் பெற்றாரா?
தமது முப்பதாம் வயதில் திருமுழுக்குப் பெற்றார்.



28. யாரிடம் திருமுழுக்குப் பெற்றார்?
திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.



29. இயேசு திருமுழுக்குப் பெற்றவுடன் என்ன நிகழ்ந்தது?
வானம் திறக்க, கடவுளின் ஆவியார் புறா வடிவில் இயேசு மீது இறங்கி வந்தார். அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. இதன் பிறகு இயேசு தமது மீட்புப் பணியை வெளிப்படையாகத் தொடங்கினார்.



30. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் என்ன அறிந்துகொள்கிறோம்?
கடவுள் ஒருவரே என்றும், அவர் தந்தை, மகன், தூய ஆவியார் என மூன்று ஆள்களாய் இருக்கிறார் என்றும் அறிந்து கொள்கிறோம். இந்த உண்மையையே மூவொரு கடவுளின் மறைபொருள் என்கிறோம்.



31. தந்தை கடவுளா?
ஆம், கடவுள்தான்.



32. மகன் கடவுளா?
ஆம், கடவுள்தான்.



33. தூய ஆவியார் கடவுளா?
ஆம், கடவுள்தான்.



34. இம்மூவரும் மூன்று கடவுளா, ஒரே கடவுளா?
ஒரே கடவுள்.



35. எப்படி ஒரே கடவுள்?
யாதொரு வேறுபாடும் இன்றி, மூவருக்கும் ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே.



36. இயேசு தம் மீட்புப் பணிக்குத் துணையாக யாரைத் தேர்ந்துகொண்டார்?
இயேசு தம் சீடர்களுள் பன்னிருவரைத் தேர்ந்துகொண்டார். அவர்களைத் திருத்தூதர் என்று அழைத்தார்.



37. கடவுளின் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?
1. கடவுள் நம் அனைவரின் அன்புத் தந்தை; நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகள்.



38. பிறர் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?
1. இயேசு நம்மை அன்பு செய்வதுபோல நாமும் ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வேண்டும்.
2. பகைவரையும் நாம் அன்பு செய்ய வேண்டும்.
3. இயேசு நம்மை மன்னிப்பது போல நாமும் பிறரை மன்னித்து வாழ வேண்டும்.



39. தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு எவ்வாறு வெளிப்படுத்தினார்?
தம் அரும் அடையாளங்களாலும் போதனையாலும் பாவிகளை மன்னித்ததாலும் சிலுவைச் சாவையே ஏற்றதாலும் தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு வெளிப்படுத்தினார்.



40. இயேசு செய்த முக்கியமான அரும் அடையாளங்கள் யாவை?
1. தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினார்.
2. அப்பம் பலுகச் செய்தார்.
3. புயலை அடக்கினார்; கடல்மீது நடந்தார்.
4. நோய்களைக் குணப்படுத்தினார்.
5. பேய்களை ஓட்டினார்.
6. இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார்.
7. தாம் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.



41. ஆகவே, இயேசு கிறிஸ்து யார்?
இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுளும் மனிதரும் ஆனவர்; பாவத்திலிருந்து நம்மை மீட்பவர். கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள உறவில் நிறை வாழ்வு காண நமக்கு வழி காட்டுபவர்.



42. இயேசு எவ்வாறு நம்மை மீட்டார்?
இயேசு தம் விண்ணகத் தந்தையின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். நம் பாவங்களுக்காகப் பாடுபட்டு, சிலுவையில் இறந்தார். கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்தார். இவ்வாறு நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தார்.



43. இயேசு நமக்காக அனுபவித்த முக்கியமான பாடுகள் யாவை?
1. யூதத் தலைவர்களால் எதிர்க்கப்பட்டார்.
2. கெத்சமனித் தோட்டத்தில் இரத்த வியர்வை சிந்தினார்.
3. யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.
4. கல்தூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டார்.
5. முள்முடி சூட்டப்பட்டார்.
6. சிலுவையில் அறையுண்டு வேதனைப்பட்டு அவலச் சாவுக்கு உள்ளானார்.



44. சிலுவைச் சாவோடு இயேசுவின் வாழ்வு முடிந்துவிட்டதா?
இல்லை. இயேசு தாம் முன்னுரைத்தவாறு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைந்தார். உலக முடிவு வரை எந்நாளும் நம்முடன் இருக்கிறார்.



45. உயிர்த்த இயேசு விண்ணேற்றம் அடையும் வரை என்ன செய்தார்?
உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்குப் பல முறை தோன்றி, அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தி வந்தார்.



46. இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா என்றால் என்ன?
இயேசு பாடுபட்டு, இறந்து, உயிர்த்ததையே இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா என்கிறோம்.



47. கிறிஸ்தவருடைய பாஸ்கா என்பது என்ன?
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து தந்தையிடம் சென்றது போல, நாமும் பாவத்தை விட்டெழுந்து, அருள் வாழ்வுக்குக் கடந்து செல்ல வேண்டும். இதுவே கிறிஸ்தவருடைய பாஸ்கா.



48. இயேசு கிறிஸ்து விண்ணகம் சென்ற பத்தாம் நாள் யாரை அனுப்பினார்?
தூய ஆவியாரை அனுப்பினார்.



49. இயேசு கிறிஸ்து இப்பொழுது எங்கே இருக்கிறார்?
இறைத் தந்தையுடன் ஒன்றுபட்டு, இயேசு கிறிஸ்து உலகம் எங்கும் இருக்கிறார். அருள்சாதன முறையில் சிறப்பாக நற்கருணையில் இருக்கிறார்.

[தொகு] IV. தூய ஆவியார்
தாம் இவ்வுலகில் ஆற்றிவந்த மீட்புப் பணி உலக முடிவு வரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று கிறிஸ்து விரும்பினார். எனவே தமக்குப் பின் இப்பணி தொடர்ந்து நடைபெறத் தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்தார். அதன்படி தாம் விண்ணகம் சென்ற பத்தாம் நாள் தூய ஆவியாரை அனுப்பினார். தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்ட திருத்தூதர்கள் அச்சம் இன்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்தனர். அதற்குச் செவிகொடுத்த பல ஆயிரக்கணக்கான மக்கள் மனந்திரும்பித் திருமுழுக்குப் பெற்றார்கள். இவ்வாறு திருச்சபை பிறந்து வளரத் தொடங்கியது.



50. தூய ஆவியார் யார்?
தந்தையோடும் மகனோடும் ஒரே கடவுளாக ஒன்றுபட்டு இருக்கும் மூன்றாம் ஆள்.



51. தூய ஆவியார் திருச்சபையில் எவ்விதம் செயலாற்றுகிறார்?
உடலுக்குள் உயிர் இருப்பது போல், தூய ஆவியார் திருச்சபையில் இருந்து, அதனை வழிநடத்துகிறார்; அதைப் புனிதப்படுத்தி வளரச் செய்கிறார்.



52. நம் ஒவ்வொருவரிடத்திலும் தூய ஆவியார் என்ன செய்கிறார்?
தூய ஆவியார் நம்முள் குடிகொண்டு நம்மைப் புனிதப்படுத்துகிறார். தந்தையோடும் மகனோடும் நம்மை இணைக்கிறார். இறைவனின் பிள்ளைகளுக்கு உரிய அன்புறவுடனும் சுதந்திரத்துடனும் நாம் வாழ நமக்கு ஆற்றல் அளிக்கிறார்.



53. தூய ஆவியார் மீது நமக்குள்ள கடமை என்ன?
தூய ஆவியாருடைய தூண்டுதல்களுக்குப் பணிந்து, அவர்மீது அன்பு கொண்டு, அவரது வழிநடத்துதலுக்கு ஏற்ப நாம் வாழ வேண்டும்.

[தொகு] V. திருச்சபை
கடவுள் தம் திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரயேல் என்னும் மக்களினத்தைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த கிறிஸ்து திருச்சபையை நிறுவினார்.



54. திருச்சபை என்றால் என்ன?
இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, திருமுழுக்குப் பெற்ற இறைமக்கள் சமூகமே திருச்சபை ஆகும்.



55. திருச்சபையை ஏற்படுத்தியவர் யார்?
திருச்சபையை ஏற்படுத்தியவர் இயேசு கிறிஸ்து.



56. திருச்சபைக்குத் தலைவர் யார்?
இயேசு கிறிஸ்துவே திருச்சபைக்குத் தலைவர்.



57. இயேசு கிறிஸ்து தமக்குப் பின் திருச்சபைக்குத் தலைவராக யாரை நியமித்தார்?
திருத்தூதர் பேதுருவை நியமித்தார்.



58. திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றல்கள் யார்?
திருத்தந்தையர்கள்.



59. திருத்தூதர்களின் வழித்தோன்றல்கள் யாவர்?
ஆயர்கள்.



60. உலகத்தில் திருச்சபை ஆற்றும் பணிகள் யாவை?
1. மீட்பின் நற்செய்தியை அறிவிக்கின்றது.
2. மக்களைப் புனிதப்படுத்துகின்றது.
3. மக்களை இறைவழியில் நடத்துகின்றது.



61. திருச்சபையின் உறுப்பினர் என்னும் முறையில் நமக்குள்ள கடமை என்ன?
திருச்சபையின் போதனைப்படி வாழ்வதும், அதன் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்பதும் நம் கடமை ஆகும்.

[தொகு] VI. திருவிவிலியம்
கடவுள் தம்மையும் தம் மீட்புத் திட்டத்தையும் மனிதருக்குச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்தினார். இவ்வாறு அவர் வெளிப்படுத்திய உண்மைகளையும் நிகழ்த்திய வரலாற்றையும் கொண்ட நூல்களின் தொகுப்பே திருவிவிலியம். இது தூய ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்டது.



62. திருவிவிலியம் என்றால் என்ன?
தூய ஆவியாரின் தூண்டுதலால் எழுதப்பட்ட இறைவார்த்தை அடங்கிய நூல்களின் தொகுப்பே திருவிவிலியம் ஆகும்.



63. திருவிவிலியத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?
1. பழைய ஏற்பாடு
2. புதிய ஏற்பாடு



64. பழைய ஏற்பாட்டில் எத்தனை நூல்கள் உள்ளன?
பழைய ஏற்பாட்டில் மொத்தம் நாற்பத்தாறு நூல்கள் உள்ளன.



65. பழைய ஏற்பாடு நமக்குக் கூறும் செய்தி என்ன?
இஸ்ரயேல் மக்களுக்கும், அவர்கள் வழியாக உலகம் அனைத்திற்கும் கடவுள் தம்மையும் தம் மீட்புத் திட்டத்தையும் வெளிப்படுத்தி, கிறிஸ்துவின் வருகைக்காக மானிடரைத் தயார் செய்த வரலாற்றைப் பழைய ஏற்பாடு நமக்குக் கூறுகிறது.

கருத்துகள் இல்லை: